Tuesday, September 27, 2011

குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.



 கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.
இதை அவசியம் கேட்டு பய‌னடையுங்கள்.


வினாக்களும் பதிலும்.


குழந்தை வளர்ப்பு ப‌ற்றி ம‌னோத‌த்துவ‌ ரீதியான‌ விளக்க‌ விடியோ.-- டாக்டர் அப்துல்லா (பெரியதாசன்)



1.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.
 
2.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.



3.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.

Post Comment

Saturday, September 17, 2011

மொபைல் போனும், கவணிக்க வேண்டிய தகவல்களும்!


மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி லிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது. 1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார். அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக செல்போன் இருந்து வந்தது. இந்நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் அண்மைக்காலமாக அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அது மாறிவிட்டது.
மொபைல் போன் முதன் முதலில் வந்து ஓராண்டு கழிந்த பின்னர் உலகில் சுமார் 12 ஆயிரம் பேரே அதன் உபயோகிப்பாளர்களாக இருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் மொபைல் போனை உபயோகிப் பவர்களின் எண்ணிக்கை 670 மில்லியன் என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பேசுவதற்கு மட்டும் வந்த இந்த மொபைல் போன் இன்று டெக்ஸ்ட் மெஸேஜ்களை (எஸ்எம்எஸ்) அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா (Data) பரிமாற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே இன்று 3ஜி மற்றும் இனி வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த வேக மாற்றங்கள் இனிவரும் காலங்களில் மொபைல் போனில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது கற்பனை கூடசெய்து பண்ணிப் பார்க்க முடியாத நிலையிலுள்ளது.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மொபைல் போனும் ஒன்று என்றே சொல்லலாம். இருப்பினும் இவ்வருட் கொடையைப் பயன்படுத்துவதில் இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் அது மிகப்பெரும் ஆபத்தாக மாறிவருகிறது. இஸ்லாத்தை தமது வாழ்க்கை திட்டமாக ஏற்று அதனடிப்படையில் வாழ விரும்பும் மக்களுக்கு மொபைல் போன் உபயோகத்தை எவ்வாறு இஸ்லாமிய முறையில் அமைத்துக் கொள்வது என்பதைத் தெளிவு படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கீழே குறிப்பிடப்படுபவை மொபைல் போனைப் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

1. தொடர்பு கொள்ளும் நேரத்தை கவனத்தில் கொள்ளல்
பொதுவாக இஸ்லாம் பிறருக்கு தொல்லை கொடுப்பதை அனுமதிக்கவில்லை. இந்த வகையில் மொபைல் மூலமாகவும் தொல்லை கொடுப்பது தடை செய்யப்பட்டதே! நாம் தொடர்பு கொள்ளக் கூடிய சகோதரர்கள் நோயாளியாக, பிஸியாக அல்லது ஏதாவது கூட்டங்களில் இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து நமது அழைப்புக்கு பதில் வராத சந்தர்ப்பங்களில் அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறே தூங்கக் கூடிய நேரங்கள், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடக் கூடிய சந்தர்ப்பங்களில் பிறரை அழைத்து தொல்லை கொடுப்பது மார்க்கம் அனுமதிக்காத விஷயமாகும்.

2. தொடர்பு கொள்பவரை சங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது.
தொலைபேசி மூலமாக ஒருவருடன் தொடர்பு கொள்ளக் கூடியவர் ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதே ஒழுங்காகும். ஒருமுறை ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று அவர்களை அழைத்த போது, யார்? என்று நபியவர்கள் வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்று பதில் சொன்னார்கள். அப்போது வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள் அவர் (பெயர் கூறி தன்னை அடையாளப்படுத்தாமல்) ‘நான்’ என்று கூறியதை கண்டித்தார்கள். (புகாரீ, முஸ்லிம்)

எனவே ஒருவரோடு தொடர்பு கொள்ளும் போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, தொலைபேசி மூலமாக பேசும்போது நாம் யார் என்பதை அடையாளப்படுத்தாவிட்டால் தொடர்பு கொண்டவர் கோபத்தில் அழைப்பைத் துண்டிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தொடர்பு கொண்டுவிட்டு மறுதரப்பில் உள்ளவர்களிடம் ‘நீங்கள் யார்?’ என வினவுவது அநாகரீகமான செயலாகும். 

எனவே தொடர்பு கொண்டவரே தன்னை அறிமுகப் படுத்துவதுதான் தொலைபேசி ஒழுங்கும் இஸ்லாம் கூறும் வழிகாட்டலும் ஆகும். மேலும் தொடர்பு கொள்ளக் கூடிய ஒருவர் மறுதரப்பில் இருந்து பதில் எதுவும் கிடைக்காத போது உடனடியாக தனது மொபைலை ஆஃப் செய்துவிடுவதும் அவரை ஒரு வகையில் சங்கடத்தில் ஆழ்த்தும். எனவே இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே!

3. கூட்டங்களில் (மீட்டிங்ஸ்) அதிகமாக மொபைலை பயன்படுத்துவது.
கூட்டங்களில் அமர்ந்திருக்கும் ஒருவர் பிறரோடு தொடர்பு கொள்வதும் தனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் தருவதும் நாகரீகமற்ற செயலாகும். அவ்வாறு நடந்து கொள்வது கூட்டத்தில் அமர்ந்திருப்போருக்கும் அதை நடத்து பவருக்கும் தொல்லை தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே மொபைலை உபயோகிப்பவர்கள் இச்செயலை கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். மொபைலை ‘ஸைலென்ட் மோடில் வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆஃப் செய்துவிடலாம். இன்று பெரும்பாலான கூட்டங்களின் ஆரம்பத்தில் இவ்விஷயம் நினைவூட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

4. பள்ளிவாசலினுள் நுழையும் போது மொபைல் போனை ஆஃப் செய்தல்
தொழுகையில் இறையச்சத்துடனும் உயிரோட்டத்துடனும் ஈடுவது மார்க்கம் வலியுறுத்தியுள்ள விஷயமாகும். எனவே இவ்வாறு பயபக்தியுடன் தொழுது கொண்டிருப்போரையும், அதை வைத்திருப்பவரையும் திசை திருப்பும் அம்சமாக மொபைல் மாறிவிடாமல் இருப்பதற்காக பள்ளிவாசலினுள் நுழையும் போதே அதை ஆஃப் செய்துவிட வேண்டும்.

5.ரிங் டோனாக இசைகளையும், அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்களையும் பயன்படுத்துவது
எனது உம்மத்தில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்கள் விபச்சாரம், பட்டு, மதுபானம் மற்றும் இசைக்கருவிகளை ஹலாலாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) இசையும் இசைக்கருவிகளும் தடை செய்யப்பட்டவை என்பதில் நான்கு மத்ஹபுடைய இமாம்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் ஏகோபித்த கருத்தில் உள்ளனர். மேலும் ஸவூதி அரேபியாவின் ஆய்வுக்குழுவும் இசை ஹராம் என தீர்ப்புவழங்கியுள்ளது. எனவே நமது தேவைகளை பரிமாறிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தக் கூடிய மொபைல்களில் இவ்வாறான இசைகளை தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.

ஒருவர் பயன்படுத்தும் ரிங்டோனை வைத்தே அவரது ஆளுமையை புரிந்து கொள்ளலாம். இளைய தலைமுறையினர் மட்டுமன்றி பெரியவர்களும் சில வேளைகளில் மார்க்க ஈடுபாடு கொண்டோரும் இவ்வாறான இசைகளுக்கு அடிமைப்படுவது வேதனை அளிக்கக்கூடிய விஷயமாகும்.

அவ்வாறே சிலர் அல்குர்ஆன் வசனங்கள்,துஆக்கள் மற்றும் அதான் எனும் பாங்கு போன்றவற்றை ரிங் டோனாகப் பயன்படுத்துகின்றனர். இது பற்றி சமகால இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் அவர்களிடம் வினவப்பட்ட போது, இவற்றை ரிங்டோனாகப் பயன்படுத்துவது அவற்றை இழிவுபடுத்துவதாகவே அமையும் என்று பதிலளித்தார். எனவே, இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

6. வாகனத்தை ஓட்டும் போது மொபைலை உபயோகிப்பது.
வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களை பயன்படுத்துவது அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. விபத்துக்களில் 28 சதவீதமானவை வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போன்களில் பேசுவதாலும், எஸ்எம்எஸ் அனுப்புவதாலும் ஏற்படுவதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இணையதளம் கூறுகிறது. இதனாலேயே பல நாடுகளில் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் உயிர்கள் பெறுமதிப்புமிக்கவையாக உள்ளன. பிறர் உயிர்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணுவதும், தன்னைத்தானே அழித்துக் கொள்வதும் இஸ்லாம் தடைசெய்திருக்கும் பாவங்களாகும். எனவே வாகனங்களை ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மார்க்க ரீதியில் கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

7. எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) அனுப்பும் போது பேண வேண்டியவை
மொபைல் போனின் பயன்பாடுகளில் டெக்ஸ்ட் மெஸேஜ் அனுப்புவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இதில் மார்க்கமும் ஒழுக்கமும் பேணப்படாமல் பயன்படுத்துவோர் நடந்து கொள்வது வேதனை தரும் அம்சமாகும். ஆபாசமான, விரசமான செய்திகளையும் உறுதிப்படுத் தப்படாத தகவல்களையும் அனுப்புவதும் அடுத்தவர்களின் மனங்களை புண்படுத்தக் கூடிய செய்திகளை பரப்புவதும் இஸ்லாம் தடைசெய்துள்ள பாவங்களாகும்.
‘தான் கேட்கின்ற அனைத்தையும் (உறுதிப் படுத்தாமல்) உடனே அறிவிப்பது ஒருவன் பொய்யன் என்பதற்குப் போதுமான சான்றாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

‘ஈமான் கொண்டவர்கள் மத்தியில் ஆபாசம் பரவ வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நோவினை தரும் தண்டனை உண்டு’ (24:19) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

எனவே எஸ்எம்எஸ் அனுப்பும் போது அல்லாஹ் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு நம்மிடம் இருக்கவேண்டும். மொபைல் போன்களின் மூலமாக ஆபாசத்தையும் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மறுமையில் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

8.மொபைல் போன்கள் மூலமாக முஸ்லிம்களின் குறைகளைத் தேடுவதும் பரப்புவதும் கூடாது
பொதுவாக மனிதர்களின் குறிப்பாக முஸ்லிம்களின் மானம் புனிதமானது என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு முஸ்லிமின் குறைகளைத் தேடுவதும் அவனை மானபங்கப்படுத்துவதும் மார்க்கத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

‘நாவினால் ஈமான் கொண்டு உள்ளத்தில் ஈமான் நுழையாமல் இருக்கும் மக்களே! முஸ்லிம்களை நோவினை செய்யாதீர்கள்! அவர்களை மானபங்கப்படுத்தாதீர்கள்!

மேலும் அவர்களின் குறைகளைத் தேடாதீர்கள்! யார் தனது சகோதர முஸ்லிமின் குறைகளைத் தேடுகிறாரோ அவரது குறைகளை அல்லாஹ் தேடுவான். மேலும் அவர்களின் உள் வீட்டில் வைத்தேனும் அவர்களை இழிவுபடுத்திவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது, அபூதாவூத், திர்மிதீ)

மொபைல் போன் என்பது தகவல் தொடர்பு வசதிக்காக வந்த ஒரு சாதனமாக இருந்த போதிலும் அதையே வேடிக்கையாகப் பயன்படுத்தும் போக்கு இன்று பலரிடம் வளர்ந்து வருகிறது. மேற்கூறப்பட்ட ஹதீஸில் வந்துள்ள வழிகாட்டல்கள் அனைத்தையும் மறந்து சிலர் செயல்படுவது வேதனை அளிக்கக் கூடியதாகும்.

மொபைல் போன்களில் உள்ள வீடியோ, போட்டோ கேமராக்களை வைத்து அந்நியப் பெண்களை படம் எடுப்பதும் அவற்றை அசிங்கமான முறையில் பயன்படுத்துவதும் தம்முடன் தொடர்பு கொள்வோரின் உரையாடல்களை திருட்டுத்தனமாக பதிவு செய்வதும் இஸ்லாம் தடைசெய்துள்ள மோசமான செயல்களாகும். இதனால் பல விபரீதமான விளைவுகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. போன்கள் பழுதடையும்போது அவற்றைத் சரிசெய்வதற்காக டெக்னீஷியனிடம் ஒப்படைக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மொபைல் போனிலுள்ள மெமரி கார்டை எடுக்காமல் கொடுத்ததனால் சில பெண்கள் தங்களது கற்புகளை இழந்த நிகழ்வுகளும் உள்ளன.

9. பிள்ளைகள் மொபைல் போன் பயன்படுத்தும் போது அவர்களை கவனிப்பது பெற்றோரின் பொறுப்பு
பிள்ளைகள் பெற்றோரிடம் அமாநிதமாக ஒப்படைக்கப்பட்ட செல்வங்கள். எனவே அவர்களை மார்க்கப்பற்றுடனும் ஒழுக்கத் துடனும் வளர்த்தெடுப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால் அவர்கள் மறுமையில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். “நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள், உங்கள் பராமரிப்புப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஓர் ஆண் தனது குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவன். அதுபற்றி அவன் விசாரிக்கப்படுவான்..” என்று நபி(ஸல்) கூறினார் கள். (புகாரி)

மொபைல் போன் என்பது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் அதை வேடிக்கைக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இளைஞர்களிடம் ஒழுக்கச் சீர்கேடுகள் வேகமாகப் பரவுகின்றன. அவர்களது கல்வியிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

இதனால்தான் உத்தரப்பிரதேசம் போன்ற சில இடங்களில் திருமணமாகாத பெண்கள் மொபல் போனில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தேவையில்லாமல் தமது பிள்ளைகளுக்கு மொபைல் போன் வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அதனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற? நிலை ஏற்பட்டால் அவர்களை சரியான முறையில் கவனித்து வழிகாட்ட வேண்டும்.

10. மொபைல் போனால் வீண் விரயங்கள் தவிர்க்கப் படல் வேண்டும்.
“உண்ணுங்கள் பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள்” என்றும் “வீண் விரயம் செய்யாதீர் நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் தோழர்கள் என்றும் அல்குர்ஆன் கூறுகின்றது. மொபைல் போன் உபயோகிப்பாளர்கள் பணம், நேரம் போன்றவற்றை வீண் விரயம் செய்வது பரவலாக உணரப்படுகிறது, எனவே, வீண் விரயம் செய்வது மொபைல் விஷயத்திலும் ஹராம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்குரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆக, அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படும் மொபைல் போனை இஸ்லாமிய வரையறைகளுக்குள் பயன்படுத்தி நன்மைகளை அடைய முயற்சி செய்வோம்.

- அஷ்ஷேக். முபாரக் மதனி
(நன்றி: சமுதாய ஒற்றுமை மாதஇதழ்)

Post Comment

Friday, September 16, 2011

சர்வதேச ஓசோன் தினம்


சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது ஓசோன் படலம். இத்தகைய ஓசோன் படலத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்., 16ம் தேதி சர்வதேச ஓசோன் தினம் கடை பிடிக்கப்படுகிறது.

 கனடா நாட்டு தலை நகரில் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி ஓசோன் படுகையை நாசம் செய்யும் ரசாயனங்களுக்கு எதிரான மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதையடுத்து அந்த தினமே 1995ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
விளைவுகள்: கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓசோன் படலம் பாதிக் கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் கடல்நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்படும். உலக சுகாதாரக் கழகத்தின் கண்டுபிடிப்புகளின் படி ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 30 லட்சம் பேர் தோல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும், இதில் 20 விழுக்காடு புற ஊதாக் கதிர்களின் பாதிப்புகளால் விளைந்தவையே என்றும் தெரிவித்துள்ளது.

ஓசோனின் எதிரி எச்.சி.எப்.சி.,: ஓசோனில் துளை ஏற்படுத்தக் கூடிய, குளோரோபுளூரோ கார்பன்களுக்கு (சி.எப்.சி.,) நாம் விடை கொடுத்துவிட்டோம். ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகள் சி.எப்.சி.,யின் உற்பத்தி, வினியோகம் மற்றும் பயன் படுத்துதல் ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தி விட்டன. ஏர்கண்டிஷனர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப்பெட்டிகள், தீ அணைப்பான்கள், ஸ்பிரேக்கள் உள்ளிட்ட அழுத்தப்பட்ட திரவம், வாயுக்களை வெளி யேற்றும் கருவிகளில் சி.எப்.சி., பயன்படுத்தப் பட்டது. இந்த சி.எப்.சி.,க்கு மாற்றுப் பொருளாக ஹைட்ரோ குளோரோபுளூரோ கார்பன்கள் (எச்.சி.எப்.சி.,) பயன்படுத்தப்படுகின்றன. சி.எப்.சி.,யின் மாற்றுப் பொருளான எச்.சி.எப்.சி.,யில் 40 வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஓசோனை பாதிக்கக் கூடியவைதான். ஆகவே, இவற்றையும் பல்வேறு கட்டங்களில் பயன் பாட்டிலிருந்து நீக்கவிட, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓசோனாக்ஷன் அலுவலகம் கருதுகிறது. இதற்கான கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான சட்டமியற்றும் வழிமுறைகளை இந்நிறுவனம் நாடுகளுக்கு அளிக்கிறது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, ஓசோன்செல், 2008ம் ஆண்டிலிருந்தே சி.எப்.சி., வெளியேற்றத்தை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது எச்.சி.எப்.சி.,யையும் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஓசோன் படலம் காக்கப் படும் பட்சத்தில், மோசமான வானிலை விளைவுகள் தடுக்கப்படும்.
1993-ஆம் ஆண்டு முதல் மாண்ட்ரீல் உடன்படிக்கையை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட நாடுகள் இந்த ரசாயனங்களை கட்டுப்படுத்தும் 296 திட்டங்களுக்கு நிதி உதவிகளும் அளிக்கப்பட்டன.

இந்த அடிப்படையில் குளோரோ ஃபுளோரோ கார்பன் (சி.எஃப்.சி.) ரசாயனங்களை முற்றிலும் கட்டுப்படுத்திய நடவடிக்கையை இந்தியா நிறைவேற்றியது. அதாவது, குறித்த நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே இந்தியா இந்த காரியத்தை நிறைவேற்றியுள்ளது.

மெதில் குளோரோஃபார்ம் உள்ளிட்ட பிற சி.டி.சி. ரசாயங்களின் பயன் மற்றும் உற்பத்தியையும் இந்தியா 85 விழு‌க்காடு கட்டு‌ப்படுத்தியுள்ளது. ஹேலோன்கள் 2003ஆம் ஆண்டு முதலே நிறுத்த‌ப்பட்டு வந்து இப்போது முழுதும் இதன் உற்பத்தி, நுகர்வு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்காக 2007-ஆம் ஆண்டு இதே தினத்தில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட மான்ட்ரீலில் மான்ட்ரீல் உடன்படிக்கை சிறந்த அமலாக்க விருது இந்தியாவிற்கு அளிக்கப்பட்டது.

பாதுகாப்பது எப்படி? * அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்- டை- ஆக்சøடு அளவை குறைக் கலாம்.


* சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.


* சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பங்களை மட்டும் பயன் படுத்தவேண்டும்.


* ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.


* பருவநிலை மாறுபாடு குறித்த உறுதியான திட்டங்களை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து செயல் படுத்த வேண்டும்.


* ஓசோனின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாக்க இந்நாளில் முயற்சி எடுக்க வேண்டும்.

Post Comment

Wednesday, September 14, 2011

காக்கா சுட்ட பாட்டியை வடை தூக்கிட்டு போயிருச்சு..


தலையே சிதறப்போகுது...! ஆனால், ஒரு காது மட்டும் செவிடாகக்கூடாதாம்...!

சகோ..! சிலர் ஒரு கருத்தை சொல்லுவர். அதற்கு நேர்மாறாய் அவர்களின் செயல் இருக்கும். இதுபோன்ற முரண்பாடுகள் நம்மை சுற்றி நிறைய உண்டு என்றாலும்... எனக்குத்தெரிந்த என்னை அதிகம் அலைக்கழித்த பத்து முரண்பாடுகளை கீழே தொகுத்துள்ளேன். காரணம், இவற்றால் மக்களுக்கு நல்லது ஏதும் விளைவதில்லை அல்லது கேடு விளைகிறது. உங்களுக்கு இதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம். மேலும், புதிய முரண்பாடுகள் என்று நீங்கள் வேறு சிலவற்றை நினைக்கலாம். அவற்றையும் பகிருங்கள்.

1  தமிழக  அரசு

மது போதையில் அடிமைப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் நடத்திக்கொண்டே... ஊருக்கு ஊர்... வீதிக்குவீதி... டாஸ்மாக்கும் நடத்துவது.

2  தமிழக கல்வித்துறை

"சாதிகள் இல்லையடி பாப்பா... 
 குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்..."

"தீண்டாமை ஒரு பாவச்செயல்... 
 தீண்டாமை ஒரு பெருங்குற்றம்... 
 தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்"

... ...என்றெல்லாம் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டே அவர்களிடம் சாதிச்சான்றிதழ் கேட்பது.

3  இந்திய அரசு

எயிட்ஸை தடுக்க, "விபச்சாரம் செய்யாதீர்கள்" என்று சொல்லி, விபச்சாரத்தை செய்வோர்மீது கடும் தண்டனையுடன் சட்டம் போடுவதை விட்டுவிட்டு... "அதை செய்யும்போது காண்டம் பாவியுங்கள்" (?!) என்று பரப்புரை செய்வதும்... பின்னர், 'தம் பரப்புரை மிகச்சரியாக பின்பற்றப்படுகிறதா' என்று "சம்பவம்" நடக்கும்போது அங்கே பிரசன்னமாகி (!?) பொறுப்புடன் பரிசோதிக்காதிருந்து விட்டு... "ஐயோ... ஐயோ... இந்தியா உலக அரங்கில் எயிட்ஸில் இரண்டாமிடத்துக்கு வந்துருச்சே... கூடிய சீக்கிரம் முதல் இடத்தை பிடித்திடும் போலிருக்கே... இந்த இந்தியாவிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கே..." என்று புலம்புவதும்.

4  இந்திய அரசின் தவறான வெளியுறவுக்கொள்கை 

நம் நாட்டு அமைதிக்காக, முதல் பிரதமர் பண்டித ஜவர்ஹர்லால் நேருவால் வகுக்கப்பட்ட "பிற அந்நிய நாட்டு உள்விவகாரங்களில் தலையிடாது நடுநிலை பேணல்" என்ற  ஐந்தில் ஒன்றான ஒரு "பஞ்சசீலக்கொள்கை" என்று ஒரு கொள்கையை தாம் பின்பற்றுவதாக கூறிக் கொண்டே... அதை உருவாக்கிய நேருவே அதை மதிக்காமல் வீசி எறிந்துவிட்டு... அடைக்கலம் தேடி ஓடி வந்த மன்னருக்கு அவரின் நாட்டை மீட்டுத்தர தன் ராணுவத்துடன் கஷ்மீருக்குள் புகுந்தது...  (விளைவு..? இத்தனை வருடங்களாக இன்றுவரை கஷ்மீர் "மீட்புப்பணி"(?)யில் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே செல்லும் இந்திய ராணுவ பட்ஜெட்... 18.6% of total budget is being spent on defense. India has the world's 10th largest defense budget spending $36.03 billion (or) Rs.1,64,415.49 crore this year..!) 

பிறகு அவரின் மகள்... பெங்காளி பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாக -உருது ஆதிக்க சக்திக்கு ஏதிராக...  கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து, மேற்கு பாகிஸ்தானுடன் போரிட்டு அவர்கள் நாட்டை உடைத்து 'பங்களாதேஷ்' என்ற புது நாட்டை உருவாக்கி நம் நாட்டு இராணுவ உயிரிழப்புகள் மூலம் தேவையின்றி பாடுபட்டது... (விளைவு..? தீராத பகையாளியை கழுத்திலேயே கட்டிக்கொண்டது)

அப்புறம் அவரின் பேரன்... இலங்கையினுள் சிங்கள இனவெறி பாஸிச அரசாங்க பயங்கரவாதத்துக்கு ஆதரவாக ராணுவத்துடன் புகுந்தது... என இவற்றின் மூலம் நம்மை சுற்றி எதிரிகளை சம்பாரித்து அதனால் பல இழப்புகளையும் குழப்பங்களையும் நம் நாட்டிக்குள் ஏற்பட செய்தது. (விளைவு..? தானும் கொல்லப்பட்டு... தமிழர்களும் கொல்லப்பட்டு...)

5  ஊழல் ஒழிப்பு 'புரட்சியாளர்கள்'

ஊழலுக்கு எதிரான சட்டம், ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதம் என்றெல்லாம் ஃபிலிம் காட்டிக்கொண்டிருப்போரை...

அந்த அனைத்து ஊழலுக்கும் அடிப்படை காரணகர்த்தாக்களாகிய லஞ்சம் கொடுப்பவர்களும், அந்த ஊழல்களை திரைமறைவில் இருந்துகொண்டு ஆசைவார்த்தை காட்டியோ... நிர்ப்பந்தம் செய்தோ... கொலை மிரட்டல் மூலமோ அதிகாரிகளை அமைச்சர்களை செய்யவைத்து செல்வத்தில் கொழிக்கும் தனியார் நிறுவன அதிபர்களும் ஊடகங்களும் தூக்கு தூக்கு என்று தூக்குவது.

6  உலக அரசுகள் 

உலக வெப்பமயமாதலுக்கு தெளிவான தீர்வான 'மரம் வளர்ப்பு'க்கும் மழை நீர் -நிலத்தடி நீர் சேகரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு, பில்லியன் டாலர் செலவழித்து, உறைபனி அளவுக்கு குளிரூட்டியதால்... பூமியின் பாதுகாப்பிற்கான ஓசோன் லேயரை ஓட்டை போடும் குளோரோ புளோரோ கார்பன்களை அரங்கிற்கு வெளியே கடும் வெப்பத்துடன் கக்கும் 'நட்சத்திர பிரம்மாண்ட குளுகுளு' அரங்கத்தில் 'உலகவெப்பமயமாதல்' பற்றி மாநாடு போடும் மறை கழண்டவர்கள்... மன்னிக்கவும் ...உலக நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகள்.

7 அமெரிக்க நேட்டோ படை அரசுகள்

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று அறிவித்துவிட்டு... அந்த போரில் ஈடுபடும் முன்னேறிய மேலை நாடுகள் எல்லாம்...

எக்கச்சக்கமாக மனித அழிவிற்கு வித்திடும் அதிபயங்கர நவீன ஆயுதங்களாக உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தி கொள்ளை இலாபம் அடித்து தம் பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வதும், தாங்கள் யாருக்கு விற்றோம் என்பதைக்கூட ரகசியமாக வைத்துக்கொள்வதும்..!

 வளைகுடா அரசுகள்

"இஸ்லாத்தில் உலக மக்கள் அனைவரும் மொழி, இன, மத, நிற வேறுபாடு தாண்டி சமம்" என்று மூச்சுக்கு ஒருவாட்டி சமத்துவம் பேசிக்கொண்டு... "அதனை பின்பற்றும் நாடுகள் நாங்கள்" என்றும் மார்தட்டிக்கொண்டு... தந்நாட்டு பிரஜைகளின் சம்பளத்தில் பாதி கூட... (அதே வேலையை செய்யும்) ஆனால்... அதிக திறன் படைத்த அயல்நாட்டவருக்கு கொடுக்காமல் இறையச்சத்தில் பித்தலாட்டம் புரிவது..! (the so called இஸ்லாமிய நாடுகளே..! தொழிலாளர் சம்பளம் மட்டும் 'உங்கள் சமத்துவத்'தில் வராதா..?)  

9   நாத்திகவாதிகள்
ஆறாவது அறிவாகிய... 'பகுத்தறிவை' பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில் வெகு சிலர், ஏதோ  'தங்களை பார்த்து உணரும் ஓரறிவு பிராணிகள்' போல நினைத்துக்கொண்டு... 'கண்ணால் கண்டால்தான் கடவுளை நம்புவேன்' என்பதும்... கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள் தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்பதும்..! 

10  கம்யூனிச அரசுகள் 

கம்யூனிசம் பேசிக்கொண்டே... 'அதுதான் உலக சமத்துவத்துக்கு' வழி என்று சொல்லிக்கொண்டே... அந்த கடைசி படியை அடைய சோஷலிசம் என்ற முதல் படியைக்கூட நடைமுறை படுத்தி அதை கடக்காமலேயே கார்ப்பரேட்டுகளின் காலில் சரணடைந்துவிட்டு இன்னும் கம்யூனிசம் மலரப்போவதாக புரட்சிக்கதை பேசித்திரியும் அரசுகள் மற்றும் அதன் தோழர்கள்..!

டிஸ்கி:- 'அறியாமை, தவறான புரிதல், முரண்பாடு ஆகிய இவற்றின் மொத்த வடிவை' எளிதில் புரிய வைக்க ஒரு டைட்டில் யோசித்ததன் விளைவு... "காக்கா சுட்ட பாட்டியை  வடை தூக்கிட்டு போயிருச்சு...".
ஆக்கம்:http://pinnoottavaathi.blogspot.com/2011/09/blog-post_13.html#more

Post Comment

Wednesday, July 20, 2011

சிறுபான்மை முஸ்லிம் மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டம்



MAULANA AZAD EDUCATION FOUNDATION
SCHOLARSHIPS FOR MERITIOUS GIRLS STUDENT BELONGING TO MINORITIES
(Ministry of Minority Affairs, Govt. of India)
SOCIAL JUSTICE SERVICE CENTRE, CHELMSFORD ROAD, NEW DELHI-110055.




CAMPUS INFO: SCHOLARSHIP CIRCULAR

Scholarship Amount:

Ø +1- Rs.6000

Ø +2- Rs.6000

Qualification to Apply:
Ø 10th Standard completed Girls Students joining +1.

Ø Marks in 10th Standard should be above 55%

Ø Family Income should be below Rs. 1,00,000.


Required Documents:

·       COMPLETELY FILLED APPLICATION FORM

·       S.S.L.C. MARK SHEET(ATTESTED)

·       FAMILY RATION CARD(ATTESTED)

·       COMMUNITY CERTIFICATE(ATTESTED)

·       SCHOOL TRANSFER CERTIFICATE(ATTESTED)

·       INCOME CERTIFICATE(ORIGINAL)

·        INCOME AFFIDAVIT IN Rs.20 NON-JUDICIAL STAMP PAPER.

For Applications and information visit:

Last date to Apply: August 31.

 _________________________________________________________________________________
For more details please contact:

CAMPUS FRONT OF INDIA
(THE NATIONAL STUDENTS ORGANISATION)
TAMILNADU STATE HEAD OFFFICE
No.33, 3rd Floor, Malayaperumal Street, Parrys, Chennai-600001.
Phone: 81225 44706, 95669 03277.

Post Comment

Thursday, June 30, 2011

இலவச அரிசியும் டாஸ்மார்க் கடைகளும்....! சிந்திக்க வைக்கும் ஒரு பார்வை...!



நம்மைச் சுற்றி ஓராயிரம் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவற்றின் மூலமும் ஆழமும் நாம் அறிவதே இல்லை. தெளிவான ஆராய்தலுக்குப் பின் நமக்கு கிடைக்கும் செய்திகளோ சுவாரஸ்யமான செய்திகலை அசுவாரஸ்யப்படுத்தி விடும் அசுவாரஸ்யமான செய்திகளை சுவாரஸ்யப்படுதியும் விடும்.

மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மார்க் எனப்படும் அரசு மதுபானக் கடைகளுக்கும், இலவச அரிசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இந்த கட்டுரையை வாசித்து முடிக்கும் போது இப்படி கேட்க மாட்டீர்கள் பாருங்களேன்....!
 



அனைத்து தமிழகத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் நம்ம அரசாங்கம் மாசம் 20 கிலோ அரிசியை இலவசமா கொடுக்குதே, எம்புட்டு பெரிய விஷயம் இது? ன்னு நம்ம அரசாங்கத்த நெனச்சி அப்பப்ப புல்லரிச்சி போயிடுவேன். இத இப்படியே கொஞ்சமா நிறுத்திக்கிட்டு என்னோட ரெண்டு நண்பர்களை உங்களுக்கு சின்னதா அறிமுகம் பண்றேன். அவங்கள அறிமுகம் செய்யிறதுக்கும், மேல நான் சொன்ன விஷயத்துக்கும் ஒரு முடிச்சி இருக்கு!! அதான்!


ரங்கன் - ராக்கி, இவங்க ரெண்டுபேரும் தாங்க அந்த ஃப்ரெண்ட்ஸ். எந்த மேட்டர்னாலும் ரெண்டு பேருக்கும் ஒத்தே வராது. கடைசில சண்டைல தான் முடியும். ஆனா, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியாம எங்க போனாலும் சேர்ந்தே போவாங்க. எனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குறீங்களா? ஒன்னியும் கிடையாது. சொல்லப்போனா அவங்களுக்கு என்ன தெரியவே தெரியாது!! ஆனா நான் எப்ப ஃப்ரீயா ஆனாலும் அவங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டு அங்கபோய் அவங்களுக்கு தெரியாம உட்கார்ந்துடுவேன்.

அவங்க பேசுறத கேக்க எனக்கு ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். பொழுது போறதே தெரியாது. நேத்து சாயந்திரமா ரொம்ப போர் அடிக்கவே, நம்ம ராக்கி - ரங்கனை பார்த்துட்டு வரலாம்னு கிளம்பினேன். அவங்க நம்ம ஊரு மெயின் பஜார் அம்மன் கோவில் பக்கத்துல இருக்குற டாஸ்மாக் பின்புறமா இருக்குற ஓப்பன் பார்ல ஒக்காந்து தண்ணி அடிச்சிகிட்டு இருந்தாங்க. இந்த மது வகைகள் வாசம் எல்லாம் எனக்கு பிடிக்காதுன்னாலும்(!) பேச்சு சுவாரஸ்யமா இருக்குமேன்னு அவங்க பக்கத்துல் போயி உட்கார்ந்தேன்.

அப்ப ரங்கன் சொன்னான், மாப்பி.. நாம நாள் தவறாம ஒரு குவாட்டராவது பிராந்தி சாப்ட்டா தாண்டா நம்ம அரசாங்கம் மக்களுக்கு எல்லாம் இலவசமா மாசம் 20 கிலோ அரிசி தரமுடியும் என்று! முதல் ரௌண்டு பாதில இருந்த நம்ம ராக்கிக்கு ஒண்ணுமே புரியல. "நீயும் இப்பத்தானடா ஆரம்பிச்ச அதுக்குள்ள ஏண்டா உளருரே?" ன்னு கேட்டான். நீ இப்படி கேப்பன்னு தெரிஞ்சிதான் முதல் ரவுண்டுலயே பேச்சை ஆரம்பித்தேன் என்றான ரங்கன். மாப்பி எதோ விவரமாத்தான் பேசப்போறான்னு புரிஞ்சிகிட்டு நம்ம ராக்கி, மீதி ரவுண்ட ஒரே இழுப்புல உள்ள தள்ளினான்.

ரங்கனும் அடுத்த ரவுண்ட ஸ்டார்ட் பண்ணிக்கிட்டே ஆரம்பித்தான் கலாட்சேபத்தை!

நம்ம அரசு விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல்லை பத்து ரூபாய் ஐம்பது காசுக்கு வாங்குகிறது. அதை வாங்குவதற்கான குடோன் மற்றும் நிர்வாகச் செலவு 50 காசு, அதை மில்லுக்கு கொண்டு செல்ல டிரான்ஸ்போர்ட் 50 காசு. ஆக மில்வரையிலும் ரூபாய் 11.50 ஆகிவிடும். அரவைக் கூலி ஒரு ரூபாய் ஐம்பது காசு, அதை திரும்ப அரசு குடோனுக்கு எடுத்துவர ஐம்பது காசு ஆக 13.50 ஆகிறது.

இன்னுமொரு அதிர்ச்சி... ஒரு கிலோ நெல்லை அரைத்தால் தவிடு, நொய் எல்லாம் போக அரை கிலோ அரிசி தான் தேறும்! அப்படியானால் ரூபாய் 13.50 என்பது அரைகிலோ அரிசிக்கான விலை மட்டுமே.

அப்ப ஒரு கிலோ அரிசியின் விலை 27 ரூபாய் அடக்கம் ஆகிவிடும். அதை திரும்ப ரீடெல் (ரேஷன்) கடைகளுக்கு கொண்டுவர, அந்த அலுவலர்களின் சம்பளம் மற்றும் நிர்வாகச் செலவு எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு கிலோ அரிசியின் அடக்கவிலை 30 ரூபாய் ஆகிவிடும். ஆக தமிழ் நாட்டில் ஒரு குடும்ப அட்டைகு 600 ரூபாய் வரையிலும் மாதாமாதம் இலவசம் (அரிசிக்காக மட்டும்) தரப்படுகின்றது.

இப்பத்தான் நம்ம மேட்டருக்கே வருகிறேன். ஒரு குவாட்டர் 70 ரூபாய் என்றால் அதில் கிட்டத்தட்ட 30 ரூபாய் வரையிலும் அரசுக்கு வரியாகக் கிடைக்கின்றது. அதில் நிர்வாகச் செலவு போக 20 ரூபாய் நிகரமாகக் கிடைத்தால் கூட ஒரு கார்டு அரிசிக்கான விலையை ஈடு செய்ய 30 குவார்ட்டர் விற்க வேண்டும். அதாவது ஒரு குடும்பத்தலைவன் ஒரு மாதம் முழுவதும் ஒரு நாள் தவறாமல் ஒரு குவார்ட்டர் அடித்தால் தான் அவன் குடும்பம் இலவசமாக வாங்கி சாப்பிடும் அரிசி ஜீரணமாகும்!!

அதாவது தமிழ்நாட்டுல 1.85 கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. அத்தனை கார்டுக்கும் இலவச அரிசி ஒதுக்கப்படுகின்றது. (வாங்கினாலும் வாங்காவிட்டாலும்). ஆக 1.85 கோடி பேர் நாள் தவறாமல் ஒரு குவாட்டர் அடிக்க வேண்டும். எல்லோராலும் தொடர்ந்து எல்லா நாளும் குடிக்க முடியாதுங்கறதுனால, ஒவ்வொருத்தரும் மாதத்துக்கு 15 நாள்ங்கிற வீதம் 3.7 கோடி தமிழக தமிழர்கள் ஒரு குவாட்டர் பிராந்தி சாப்பிட்டால் கணக்கு டேலி ஆகிவிடும்! மக்களுக்கும் இலவசம் தந்த மாதிரி ஆகிவிடும், அரசாங்கத்திற்கும் உதவின மாதிரி ஆகிவிடும்!

ஒரு மனிதன் சுவாசத்தில் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை இழுத்துக் கொண்டு, அவனுக்குத் தேவையான் ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்கு 20 மரங்கள் வேண்டுமாம். அதே மாதிரிதான் நாமும்! தினமும் ஒரு குவாட்டருக்கு மேல அடிப்பதால இனிமே நம்ம பொண்டாட்டியெல்லாம் குடிச்சிட்டு வீட்ட கவனிக்காம இருக்கோம்னு நாக்குல பல்ல போட்டு பேசிடப்பூடாது என்று நம்ம ராக்கி ஒருவித மந்தகாசப் புன்னகையுடன் கூறினான்.

இவர்கள் பேச்சை மனதில் அசைபோட்டுக் கொண்டே ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்டு படுக்கும் போது, தங்கமணியிடம், ராக்கி - ரங்கன் சம்பாஷணையைக் கூறி, அரசாங்கம் செய்வது சரியா? தவறா? என்ற எனது சந்தேகத்தைக் கேட்டேன். பல சமயங்களில் நம்மைவிட அவர்கள் புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக எனக்கு ஒரு நம்பிக்கை! துணிகளையெல்லாம் மடித்து வைத்துக் கொண்டே என் மனைவியும் பேச ஆரம்பித்தார்.

ஏங்க, அஞ்சு வருஷம் முன்னாடி, நம்ம வீட்டு தோட்டத்தை சுத்தம் செய்யணும்னா, ஒரு தொழிலாளிக்கு நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய் வரையிலும் கூலி தருவோம். ஆனா இன்னக்கி என்னா தற்றோம்? 250 ரூபாய்க்கு குறைவாக யாருமே வேலைக்கு வருவதில்லை. அதுவும் முன்பு செய்ததில் பாதி வேலை தான் செய்கிறார்கள். அதனால் அடுத்த நாளும் செய்யச் சொல்லி மொத்தமாக அதே வேலைக்கு 500 ரூபாய் செலவாகிறது.

ஒரு நாளைக்கு 250 சம்பாதிக்கும் அந்த தொழிலாளியின் அன்றைய செலவு என்ன? 4 நபர்கள் கொண்ட அவன் குடும்பதுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை அரசாங்கம் இலவசமாகவே தந்துவிடுகிறது. அன்றைக்கு நல்லமுறையில் குழம்பு வைக்க 25 ரூபாயும் காய்கறி 25 ரூபாயும் அதிகபட்சமாக செலவாகிறது. மற்ற திண்பண்டங்கள் இத்தியாதிகளுக்காக 50 ரூபாய் என்றால் 100 ரூபாயில் அன்றைய சாப்பாட்டுப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிடுகின்றது. மிச்சம் 150 ரூபாய்.

மாதம் 20 நாட்கள் மட்டுமே அவன் வேலை செய்வதாக வைத்துக் கொண்டாலும் மாதம் 3000 ரூபாய் அவனுக்கு சேமிப்பாகிறது. வருடத்திற்கு 36000 ரூபாய். அதில் இரு குழந்தைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ செலவுகள், துணிமணிகள் எல்லாம் முடித்துக் கொள்ளலாம். வருடத்திற்கு 120 நாட்கள் சும்மாயிருக்கின்றானே, அந்த நாட்களில் ஒரு 50 நாட்கள் வேலை செய்தால் கூட தீபாவளி, பண்டிகைகள், பொழுது போக்குகள் அனைத்தையும் சீராகக் கொண்டாடி விடலாம்.

250 ரூபாய் கூலி வாங்கும் ஒரு தொழிலாளி கூட இரண்டு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து, மனைவியை குடும்பத் தலைவியாக மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். அதே தினக்கூலி தொழிலாளி இந்த ராக்கி - ரங்கன் போல் குடித்து விட்டு வெட்டி நியாயங்களும், வியாக்கியானங்களும் பேசிக்கொண்டிருக்காமல், வேறு கெட்ட பழக்கங்கள் இல்லாமலும் இருந்து, தன் முன்னேற்றத்தில் கருத்தாக இருந்தாலே போதும், ஒரு வருடத்திலேயே, பயிற்சி பெற்ற தனித்திறமை தொழிலாளியாக, அதாவது ஒரு டிரைவர், கொத்தனார், பிளம்பர், எலக்ட்ரீஷியன், கம்பி கட்டுதல், வெல்டிங்... இப்படியாக மாறி விட நிச்சயமான வாய்ப்பு இருக்கிறது.

அப்படி ஆகும் பட்சத்தில் அவனுடைய ஒரு நாள் சம்பளமே 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையிலும் என்றாகிறது!

ஒரு ஆவேசம் வந்தவராய் இத்தனையும் பேசி விட்டு கடகடவென்று தண்ணீரைக் குடித்த தங்கமணியை ஒருவித ஆயாசையுடன் பார்த்தேன். எனக்கு அந்த ராக்கி - ரங்கன் சொல்றதும் சரின்னு படுது, தங்கமணி சொல்றதும் சரிதானோன்னு யோசிக்க வைக்குது, என்ன ஒரு மனது எனக்கு? புதுசா நாமளும் ஏதாவது யோசிக்கணுமோ?!

Post Comment

Tuesday, June 28, 2011

தொழில் கல்வி படி - கை (பை) நிறைய காசைப் பிடி!



வருடக் கணக்கில் கல்லூரியில் எதற்கென்றே தெரியாமல் படித்து பிறகு வெளியே வந்து வெளி உலகை தெரிந்து கொள்வதை விட இன்றைய சூழ்நிலையில் எது படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற தொலைநோக்குப் பார்வை அவசியம். 5 , 6 லட்சம் கொடுத்து எப்படியாவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போய் ஏதாவது ஒரு ஹோட்டலில் சாதாரன சர்வராகத்தான் பணிபுரிவேன் என்று அடம் பிடிப்பவராகத்தான் நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் 'சவுதி/கத்தார்/ஒமன்/குவைத்/துபை' போன்ற நாடுகளுக்கு சம்பாதிக்க வர விரும்புபவர்கள் வெல்டிங் (அல்லது) இன்ஸ்ட்ருமன்டேசன் படித்து சான்றிதழ் பெற்று வந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும். குறிப்பாக (AWS-American Welding Soceity) வெல்டிங் சம்பந்தமாக படித்து சான்றிதழ் பெற்று வந்தால் குறைந்தது உணவு மற்றும் இருப்பிடம் போக ரூ. 30 முதல் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். 'அமெரிக்கன் வெல்டிங் சொசைட்டி அமெரிக்காவில் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்'. அதன் கிளை நிறுவனம் சென்னையில் தான் இருக்கிறது. இங்கு பெரும்பாலும் உள்ளவர்கள் அங்கு படித்து வந்தவர்கள் தான். என்னுடைய (வேலூர்) நண்பன் ஒருவன் இது படித்து அங்கு (AWS -சென்னையில்) சான்றிதழ் பெற்று இன்று கத்தாரில் ரூ. 1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம்) சம்பாதித்து குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறான்.(இது எல்லாம் அவன் சொன்னவை) நம்புவீர்களா??? அது ஒரு கோர்ஸ் தான் அங்கு அல்லது அது சார்ந்த அமைப்பில் சேர்ந்து ஓரிரு வருடம் படிக்க வேண்டும் பாலிடெக்னிக் போலத்தான் செய்முறை பயிற்சியுடன். இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு தாம் இணைய தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் அதன் சென்னை விலாசம் உட்பட. ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நல்ல எதிர்காலம் உள்ளது இன்ஷா அல்லாஹ்.
http://www.aws.org/w/a/certification/inter_contact.html
முகவரி இதோ:-
BETZ Engineering & Technology Zone
49-Vellalar Street
Near St Thomas Mount Railway Station
Chennai-68. Tel: 91-44-65364123/22441234,TeleFax: 91-44-22441234
Email: betzzone@vsnl.net
http://www.betzinternational.com/
Contacts: RG.Ganesan Head-Inspection Services. 9840175179/9962200944, rg_ganesan@yahoo.com
CM.Selvaraj HR & Marketing, 9884021740, cm_selva@yahoo.com
Schedule: Every two months.

Industrial Quality Concepts
IQC Training & Services, Pte, Ltd
Shivani Block -1, Ist Floor
40 East Coast Road, Chennai, India 600041
Telephone: 91-44-42158714/42158715/24451009,
Fax: 91-44-5215-8715
Email: iqc.in.org@vsnl.com
Contacts: Sundaran Baskaran, V. Raghavendran.
Schedule: Every two or three months.

Post Comment

Monday, June 27, 2011

தமிழ்நாடு அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினியில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் – முதலமைச்சர் பார்வைக்கு…


தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக லேப்டாப் (மடிக்கணினி) வழங்க இருக்கிறது, மடிக்கணினி மூலம் பல விதங்களில் மாணவர்கள் தவறான வழிகளில் சென்று விட வாய்ப்பு அதிகம் இதை தடுக்க அரசு கொடுக்க்கும் லேப்டாப்-ல் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி ஒரு முழுமையான ரிப்போர்ட்.


வருங்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்பதை யாராலும்  மறுக்க முடியாது. இளைஞர்களை கெடுக்கும் முக்கிய ஆயுதங்களான போதைப்பொருட்கள் மற்றும் ஆபாசம் இந்த இரண்டையும் முழுவதும் தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு தடை  செய்வதன் மூலம் பெரும் பாதிப்பை குறைக்க முடியும். தொலைக்காட்சி மூலம்  பெரும்பாலும் ஆபாச நிகழ்ச்சிகள் இந்தியாவில் தெரிவதில்லை என்றாலும் இணையம் வழியாக ஆபாச படம், மற்றும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிகை பத்து  மடங்காக அதிகரித்துள்ளது. இனி பள்ளி மாணவர்கள் கையிலும் , கல்லூரி மாணவர்கள் கையிலும் மடிக்கணினி கிடைத்தால் எந்த அளவிற்கு மாணவர்களின் அறிவு வளருமோ அதே அளவிற்கு தவறு நடப்பதும் அதிகம், உதாரணமாக நாம் கூகிள் தளத்தில் சென்று  ஏதாவது ஒரு தமிழ் வார்த்தையை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது அது ஆபாச வார்த்தை நமக்கு காட்டுகிறது அதைச் சொடுக்கி அவர்கள் தவறான தளத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம் அதற்காக இண்டெர்நெட் வேண்டாம் என்றால் அது முட்டாள்தனமான  முடிவாக இருக்கும். இதைத்தடுக்க அரசு கொடுக்கும் மடிக்கணினியில் என்ன மாற்றங்கள் எல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம்.
* ஆபாச தளங்கள் எக்காரணத்தை கொண்டும் அரசு கொடுக்கும் லேப்டாப்-ல் தெரியக்கூடாது. இதற்காக கணினியுடன் இணைந்த ஆபாசதள தடுப்பு மென்பொருள்   சேர்ந்தே இருக்க வேண்டும்.( Uninstall செய்ய முடியாத வண்ணம் இருக்க வேண்டும்).
* குறிப்பிட்ட ஆபாச வார்த்தைகளை கொடுத்து தேடினால் முடிவு காட்டப்படக்கூடாது.
* MP4 , 3GP போன்ற வீடியோ கோப்புகள் கணினியில் Play செய்ய முடியாத வண்ணம்  இருக்க வேண்டும் அல்லது , இந்த கோப்புகளை  லேப்டாப்-ல் காப்பி செய்தால் உடனடியாக Delete ஆகும்படி இருக்க வேண்டும்.
* சமூக வலைதளங்களான பேஸ்புக் , டிவிட்டர் ,ஆர்குட் போன்ற தளங்களை பயன்படுத்த  முடியாத வண்ணம் இருக்க வேண்டும்.
* வைரஸ் பாதுகாப்பு மென்பொருள் அவ்வப்போது தானாகவே அப்டேட் செய்யும் வண்ணம்   இருக்க வேண்டும்.
* Hacking Software, மற்றும் போலியான மென்பொருட்கள் கணினியில் இன்ஸ்டால்   செய்ய முடியாதபடி இருக்க வேண்டும்.
கூகிள் தளம் இல்லை என்றால் இணையமே இல்லை என்று சொல்லும் நமக்கு சீனா ஒரு முன் உதாரணம் தான், அந்த நாட்டில் இளைஞர்கள் இணையதளம் மூலம் எந்த வழியிலும் தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக ஆபாச தளங்களை காட்டியதற்காக  கூகிளுக்கு சீனாவில் இடம் இல்லை, இப்போது இந்த பதிவின் முக்கியத்துவம் நமக்கு தெரிந்திருக்கும்.  அரசு கொடுக்க இருக்கும்  இலவச மடிக்கணினிகளில் இங்கு  குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு அம்சம் இருந்தால் மாணவர்கள் தவறான வழிகளில் செல்வது பெருமளவு குறையும். இந்தப்பதிவு அரசின் கவனத்திற்கு செல்லுமா என்று தெரியவில்லை முடிந்த வரை இந்தப்பதிவை அரசு  அதிகாரிகளிடமும் நம் நண்பர்களிடமும் கொண்டு சேர்ப்பது நம் கடமை.
பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.
நம் இமெயிலை குறிவைக்கும் புதிய பாப்அப்-ஐ தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை
ஆபாச இணையதளங்களில் இருந்து நம் கணினியையும்,குழந்தைகளையும் பாதுகாக்க
டிவிட்டரில் நேரடியாக உங்கள் கணக்கை திருட முயற்ச்சி பாதுகாப்பு வழிமுறை

 சிந்தனைக்கு
குற்றம் செய்யக்கூடிய சுழ்நிலையை தவிர்த்தால் பெருமளவு
குற்றங்கள் நடைபெறாமல் இருக்கும்.

Post Comment

Monday, June 20, 2011

செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்



கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas)  புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விஷயம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.  

இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.

  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும். 
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும். 
  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். 
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

Post Comment

தோலில் பிரச்சினை உள்ளவர்கள் ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின்
உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு படங்களுடன் தெளிவான விளக்கம் அளிக்க ஒரு தளம் உள்ளது.

பூமியில் ஆத்மா வசிக்க இறைவன் கொடுத்த அழகான வாடகை வீடான இந்த உடலில் தோலில் ஏற்படும் பல விதமான பிரச்சினைகள் பற்றி சரியாகத் தெரியாமல் நாளும் பெருமளவு பணத்தை வீண் செய்து கொண்டிருக்கிறோம். இனி நம் உடலின் தோலில்(Skin) ஏற்படும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் படத்துடன் தெளிவான விளக்கம் கொடுக்க ஒரு தளம் உள்ளது.

ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் உடல் தோலில் ஏற்படும் பலவிதமான வித்தியாசமான பிரச்சினைகள் அனைத்தையும் இத்தளத்தில் இருந்து விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
முதலில் தோன்றும் விண்டோவில் Age and Gender என்பதில் குழந்தையா அல்லது பெரியவர்களா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Select Body Location என்பதில் உடலின் எந்த பாகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அதைச் சொடுக்கி Go என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த உடல் பாகத்தின் தோலில் ஏற்படும் பிரச்சினைகள் படங்களுடன் தெளிவாக நமக்கு காட்டப்படும். ஒவ்வொன்றையும் சொடுக்கி அந்த பிரச்சினைகளை மேலும் அறிந்து கொள்ளலாம்.
தோலில் பிரச்சினை உள்ளவர்கள் முதல் தோலில் நோய் வராமால் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள அனைவருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.
தோலில் பிரச்சினை உள்ளவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.

Post Comment